ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு அடி-உதை கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு


ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு அடி-உதை கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Oct 2020 10:57 PM GMT (Updated: 22 Oct 2020 10:57 PM GMT)

வில்லியனூரில் ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு பெண்ணை அடித்து உதைத்த கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வில்லியனூர், 

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 38). திருபுவனையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பாகூர் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது விஜயலட்சுமிக்கு அவரது பெற்றோர் 100 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் சீர்வரிசையாக கொடுத்ததாக தெரிகிறது. இவர்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்ற நிலையில் விஜயலட்சுமிக்கு அடிக் கடி கருச்சிதைவு ஏற்பட்டதால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

அடி, உதை

இந்தநிலையில் விஜயலட்சுமியின் பெற்றோர் தங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்று பணம் வைத்து இருந்தனர். அதில் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கி வருமாறு விஜயலட்சுமியை அவரது கணவர் நடராஜன், மாமனார் சேகர், மாமியார் செல்வி ஆகியோர் வற்புறுத்தி வந்தனர். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் அவரது கணவர், மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story