வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி


வாசுதேவநல்லூர் அருகே, வயலில் உழுதபோது பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பலி
x
தினத்தந்தி 22 Oct 2020 11:58 PM GMT (Updated: 22 Oct 2020 11:58 PM GMT)

வாசுதேவநல்லூர் அருகே வயலில் உழவு செய்தபோது கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

வாசுதேவநல்லூர், 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே தும்பைமேடு முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமபாண்டி (வயது 50). விவசாயியான இவர் பக்கத்து ஊரான ஏமன்பட்டியில் உள்ள செல்லப்பாவுக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வயலில் உள்ள தரைமட்ட கிணற்றின் அருகில் உழவு செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 65 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இருந்தது. இதனால் ராமபாண்டி கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வ முருகேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, ராமபாண்டியின் உடலை மீட்டனர்.

பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story