கள்ளக்குறிச்சியில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி - எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்


கள்ளக்குறிச்சியில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி - எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 23 Oct 2020 12:42 PM GMT (Updated: 23 Oct 2020 12:42 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ரூ.104 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

கள்ளக்குறிச்சி,

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 8-1-2019 அன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

அதன்பிறகு கடந்த 26-11-2019 அன்று கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி வீரசோழபுரம் கிராம எல்லையில் அரசுக்கு சொந்தமான 40.18 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அதில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. மண் பரிசோதனை முடிவு மற்றும் அந்த இடத்திற்கான வரைபடம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரசு வீரசோழபுரம் எல்லையில் கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு ரூ.104 கோடி நிதியை ஒதுக்கி கடந்த 27-6-2020 அன்று அரசாணை வெளியிட்டது. மேலும் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட உள்ள மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை தொடங்கி வைக்கிறார். 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் தரைதளம் உள்பட 8 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இந்த கலெக்டர் அலுவலகத்தில் 66 அலுவலகங்கள் செயல்பட உள்ளது. மேலும் இந்த வளாகத்தில் மாவட்ட கலெக்டர் குடியிருப்பு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பு, போலீஸ் அணிவகுப்பு மைதானம், விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளும் அமைய உள்ளன. இதற்கான பணிகளை விழுப்புரம் செயற்பொறியாளர் வெங்கடாசலம், கள்ளக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் கவுதமன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Next Story