ராசிபுரம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: கைதான 9 பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை


ராசிபுரம் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: கைதான 9 பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை
x
தினத்தந்தி 23 Oct 2020 3:28 PM GMT (Updated: 23 Oct 2020 3:28 PM GMT)

ராசிபுரம் அருகே சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 9 பேருக்கு நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அணைப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 12 மற்றும் 13 வயது சிறுமிகளை அப்பகுதியை சேர்ந்த 11 பேர் 6 மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ராசிபுரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி (வயது75), பெரியசாமி (70), வரதராஜன் (55), செந்தமிழ் செல்வன் (31), மணிகண்டன் (30), சூர்யா (26), சிவா (26), கோகுல் (23) மற்றும் சங்கர் (20) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 9 பேரும் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் கைதான 17 வயதுடைய 2 மாணவர்கள் சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முத்துசாமி உள்ளிட்ட 9 பேருக்கும் எச்.ஐ.வி., மற்றும் கொரோனா தொற்று உள்ளதா? என நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் வருகிற 29-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பார்கள் எனவும், அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் அல்லது கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story