82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயற்சி டிப்-டாப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு


82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சங்கிலி பறிக்க முயற்சி டிப்-டாப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2020 11:14 PM GMT (Updated: 23 Oct 2020 11:14 PM GMT)

வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து 82 வயது மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற டிப்-டாப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம், 

சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், தனியார் மழலை பள்ளி நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு வாடகைக்கு விடப்படும் என வீட்டின் முன்பு அட்டையில் எழுதி தொங்க விட்டு இருந்தார்.

இதை பார்த்த டிப்-டாப் பெண் ஒருவர், வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் ரவிக்குமார் வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவரது தாயார் அம்பிகா (வயது 82) மட்டும் தனியாக இருந்தார். பின்னர் வீட்டை பார்த்த பெண், தனக்கு பிடித்து இருப்பதாக மூதாட்டியிடம் கூறி, அவரது குடும்பத்தை பற்றி நீண்டநேரம் விசாரித்தார்.

மிளகாய் பொடி தூவினார்

மூதாட்டியும் அன்பாக பேசிய டிப்-டாப் பெண்ணை நம்பி, வீட்டில் இருந்த முறுக்கு, தண்ணீர் கொடுத்து உபசரித்து உள்ளார். பின்னர் வீட்டுக்கு முன்பணம் கொடுக்க பணம் எடுத்து வரும்படி தனது கணவரிடம் கூறி இருப்பதாக மூதாட்டியிடம் கூறிவிட்டு நீண்டநேரம் வீட்டை நோட்டமிட்டார். மதியம் ரவிக்குமார் சாப்பிட வந்தவுடன் அங்கிருந்து அந்த பெண் சென்றுவிட்டார். பின்னர் மாலையில் மீண்டும் மூதாட்டி வீட்டுக்கு சென்றார். நீண்டநேரம் வீட்டில் இருந்ததால் சந்தேகம் அடைந்த மூதாட்டி, அந்த பெண்ணை, “இங்கிருந்து சென்றுவிட்டு நாளை வா” என்றார்.

பின்னர் வெளியே சென்ற அந்த பெண், வீட்டின் முன்புறம் இருந்த மூதாட்டிக்கு சொந்தமான பெட்டிகடையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து மூதாட்டி அம்பிகா முகத்தில் வீசிவிட்டு அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார்.

மூதாட்டி போராட்டம்

முகத்தில் மிளகாய் பொடியை வீசினாலும் மூதாட்டி தைரியமாக தனது தங்க சங்கிலியை பறிக்க விடாமல் கைகளால் கெட்டியாக பிடித்தபடி பெண்ணுடன் போராடினார். மேலும் அவர் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் பயந்துபோன டிப்டாப் பெண் நகையை பறிக்க முடியாமல் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து டிப்டாப் பெண்ணை தேடி வருகின்றனர்.

82 வயதிலும் தைரியமாக தனது நகையை பறிகொடுக்காமல் டிப்டாப் பெண்ணை எதிர்த்து போராடிய மூதாட்டியை அந்த பகுதியினரும், போலீசாரும் பாராட்டினர்.

Next Story