“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2020 12:03 AM GMT (Updated: 24 Oct 2020 12:03 AM GMT)

“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

ஏரல், 

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளார். தேர்தலின்போது அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதனை தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு கூறி வலியுறுத்துவார்கள். அந்த வகையில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும் இட ஒதுக்கீடு தொடர்பாக கூறி இருக்கிறார். இதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி, ராஜ்யசபா எம்.பி. பதவியை அன்புமணி ராமதாசுக்கு வழங்கி உள்ளோம். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, அதில் இடம் பெறுவது குறித்து தலைமை முடிவு செய்யும். மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது இயல்பானது. சுனாமி, கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. இதனை நடிகர் கமல்ஹாசன் நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் எட்டயபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

திரையரங்குகள் திறப்பு

நடிகர்கள் சம்பள குறைப்பு செய்வது, அவர்களாகவே முடிவு செய்ய வேண்டிய விஷயம். இதில் அழுத்தம் கொடுக்க முடியாது. அரசு நேரடியாக தலையிட்டு சொல்வதற்கு நல்ல முகாந்திரம் இருக்காது. இதுகுறித்து திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், நடிகர் சங்கத்தினர் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் திரையரங்குகளை மீண்டும் திறக்கும்போது, அன்றைய சூழ்நிலையை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்ற தகவல் வந்ததும், அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவோம் என்று அறிவித்தது, இந்தியாவிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். இதனை பொறுத்து கொள்ள முடியாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story