குமரியில் 23,871 பேருக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


குமரியில் 23,871 பேருக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
x
தினத்தந்தி 24 Oct 2020 9:11 AM GMT (Updated: 24 Oct 2020 9:11 AM GMT)

குமரி மாவட்டத்தில் 23 ஆயிரத்து 871 மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் வினியோகத்தை முதன்மை கல்வி அதிகாரி ராமன் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

கொரோனா பரவலின் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், வருகைப்பதிவேடு அடிப்படையிலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்வி மாவட்டம் வழியாக குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன.

இதையடுத்து நேற்று மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் நேற்று தொடங்கியது. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கு முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் சான்றிதழ்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை தயாபதி நளதம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். குமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 475 பள்ளிகள் மூலம் மாணவர்கள் 11,850 பேருக்கும், மாணவிகள் 12,021 பேருக்கும் என மொத்தம் 23,871 பேருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படுவதாகவும், அசல் மதிப்பெண் பெற்ற 15 நாட்களுக்குள் பள்ளிகள் மூலமாக மாணவ- மாணவிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை மேற்கொள்ளவும் அந்தந்த பள்ளி நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் தெரிவித்தார்.

Next Story