சேலம், ஆத்தூர், எடப்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சேலம், ஆத்தூர், எடப்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2020 12:22 AM GMT (Updated: 26 Oct 2020 12:22 AM GMT)

சேலம், ஆத்தூர், எடப்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், 

மனு தர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் சசிக்குமார் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து 2 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் இணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மைதீன், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நேற்று ஆத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் நாராயணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஆட்டோ செல்வம், கருப்பையா, ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, சக்திவேல், தென்னங்குடிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிமணி, தலைவாசல் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்களை இழிவாக பேசியதாக தொல்.திருமாவளவன் மீது போலீசில் புகார் கொடுத்த அசுவந்தாமன் என்பவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நிர்வாகிகள் நாராயணன், ஆட்டோ செல்வம் உள்பட 40 பேர் மீது ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

எடப்பாடி

எடப்பாடி பஸ்நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அய்யாவு தலைமை தாங்கினார். அப்போது பெண்களை இழிவாகவும், கொச்சை படுத்தியும் எழுதப்பட்ட மனுதர்ம புத்தகத்தின் துண்டு பிரசுரங்களை தீ வைத்து எரித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story