பெங்களூருவில், கடனை திரும்ப கொடுக்காததால் வாலிபரை கொன்று உடல் புதைப்பு நண்பர்கள் உள்பட 5 பேர் கைது


பெங்களூருவில், கடனை திரும்ப கொடுக்காததால் வாலிபரை கொன்று உடல் புதைப்பு நண்பர்கள் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 2:07 AM GMT (Updated: 28 Oct 2020 2:07 AM GMT)

பெங்களூருவில், கடனை திரும்ப கொடுக்காததால் வாலிபரை கடத்தி சென்று அவரை கொலை செய்து உடலை புதைத்த நண்பர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, 

பெங்களூரு லக்கரே பகுதியில் வசித்து வந்தவர் மாதேஷ்கவுடா(வயது 26). இவரது நண்பர்கள் கிருஷ்ணகுமார் என்கிற அப்பி(வயது 38), ராமதாஸ்(28). இவர்கள் 2 பேரும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாதேஷ்கவுடா, கிருஷ்ணகுமார் மற்றும் ராமதாஸ் ஆகியோரிடம் இருந்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் கடனை திரும்ப கொடுக்காமல் மாதேஷ் கவுடா இருந்து உள்ளார்.

இதுதொடர்பாக மாதேஷ்கவுடாவிடம், கிருஷ்ணகுமாரும், ராமதாசும் கேட்டு வந்து உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளில் கலந்து கொள்ள மாதேஷ் கவுடா சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மாதேஷ் கவுடாவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.

கொன்று புதைப்பு-5 பேர் கைது

இந்த நிலையில் மாதேஷ் கவுடாவின் தந்தை தேவேகவுடாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கிருஷ்ணகுமார், ராமதாஸ் ஆகியோர் ரூ.2 லட்சம் கடனை திரும்ப கொடுக்காததால் உங்களது மகனை கடத்தி வைத்து உள்ளோம். வட்டியுடன் சேர்த்து ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு உங்கள் மகனை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவேகவுடா சம்பவம் குறித்து ராஜகோபால்நகர் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதன்பேரில் போலீசார் கடத்தப்பட்ட மாதேஷ் கவுடாவை தேடிவந்தனர். இந்த நிலையில் ஹெசருகட்டா பகுதியில் உள்ள பண்ணையில் கிருஷ்ணகுமாரும், ராமதாசும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது மாதேஷ் கவுடாவை கொன்று அவரது உடலை புதைத்ததாக 2 பேரும் தெரிவித்தனர். இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மாதேஷ் கவுடா உடலை புதைத்த இடத்திற்கு 2 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். பின்னர் புதைக்கப்பட்ட மாதேஷ் கவுடாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாதேஷ் கவுடா உடலை புதைக்க உதவியதாக தோட்டத்தில் வேலை செய்த கணேஷ், சந்தோஷ், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேர் மீது ராஜகோபால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story