பல்லாரி அருகே வாய்த்தகராறில் தங்கை அடித்து கொலை வாலிபர் கைது


பல்லாரி அருகே வாய்த்தகராறில் தங்கை அடித்து கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Oct 2020 10:29 PM GMT (Updated: 28 Oct 2020 10:29 PM GMT)

பல்லாரி அருகே வாய்த்தகராறில் தங்கையை அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பல்லாரி,

பல்லாரி மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா கரடிதுர்கா கிராமத்தை சேர்ந்த அனுமந்தப்பா(வயது 34). இவரது தங்கை ரத்னம்மா(28). இவர்கள் 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி அனுமந்தப்பாவும், ரத்னம்மாவும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்.

அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு உண்டானது. மேலும் வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த அனுமந்தப்பா வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ரத்னம்மாவை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ரத்னம்மா ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அனுமந்தப்பா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உயிருக்கு போராடிய ரத்னம்மாவை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரப்பனஹள்ளி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மேல்சிகிச்சைக்காக தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ரத்னம்மா அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் ரத்னம்மா பரிதாபமாக இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அரப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அனுமந்தப்பாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தங்கையை, அண்ணனே கொலை செய்த சம்பவம் கரடிதுர்கா கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story