கீழ்வேளூர் அருகே கொடியாலத்தூரில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை


கீழ்வேளூர் அருகே கொடியாலத்தூரில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 Nov 2020 12:44 AM GMT (Updated: 2 Nov 2020 12:44 AM GMT)

கீழ்வேளூர் அருகே கொடியாலத்தூரில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

சிக்கல், 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் கொடியாலத்தூர் கிராமத்தில் வெள்ளை ஆற்று பாசனம் மூலம் மாவூர் ரெகுலேட்டர் அருகில் இருந்து தனி பாசனவாய்க்கால் மூலம் 7 கி.மீ தூரத்தில் இருந்து தண்ணீர் வந்து பல வருடங்களாக பாசனம் செய்து வந்தோம். ஆனால் இந்த வருடம் மாவூர் அருகே ஆற்று கீழ்குமுளி பொதுபணித்துறையினரால் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 4 அடி ஆற்று கீழ்குமுளி கட்டப்பட்டு அதன் மூலம் எங்கள் பகுதிக்கு வந்த தண்ணீரை கொண்டு சாகுபடி செய்து வந்தோம். தற்போது அதை உடைத்து விட்டு புதிதாக 2 அடி அகலம் மட்டும் கட்டியதால் தண்ணீர் வரத்து சரியானபடி வராமல் தடைப்பட்டு போனது. புதிதாக கட்டப்படும் ஆற்று கீழ்குமுளி அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் விவசாயிகளிடம் கேட்காமல் 2 அடி கட்டியதால் தான் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கருகும் பயிர்கள்

இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள சம்பா நெற்பயிர்கள் 500 ஏக்கர் தண்ணீர் வரத்து இல்லாமல் கருகி போனது. இதனால் மோட்டார் என்ஜின் வைத்து தண்ணீர் இரைத்து சாகுபடி செய்து வருகிறோம். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் பயிர்கள் ஓரளவு வளர்ந்து வந்தது. தற்போது நாங்கள் பயிர்களை காப்பாற்ற மழையை நம்பி உள்ளோம். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுக்கீழ்குமுளியை பழையபடி மாற்றி அமைத்து தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story