அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Nov 2020 10:40 PM GMT (Updated: 2 Nov 2020 10:40 PM GMT)

அரியலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தாமரைக்குளம், 

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விதவை உதவி திட்டம், தாலிக்கு தங்கம், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது மனுக்களை அளித்து வந்தனர். செந்துறை கிராமத்தில் உள்ள மரங்களின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் நிலத்தில் குறுங்காடுகள் அமைப்பதற்காக அனுமதி வேண்டி மாவட்ட கலெக்டரிடம் காணொலி காட்சி மூலம் மனு அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த தொட்டி குளம் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவர் திடீரென்று மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார், ரவியின் தீக் குளிக்கும் முயற்சியை தடுத்து விசாரண நடத்தினர்.

விசாரணையில் ரவி, கடந்த 2018-ம் ஆண்டு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி சார்பில் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நான் குடியிருந்த கூரை வீட்டை இடித்துவிட்டு, கடன் வாங்கி பாதி அளவிற்கு வீட்டை கட்டினேன். இதனையடுத்து இந்த திட்டத்தின் கீழ் 2 தவணைத் தொகை ஊராட்சிமன்ற அலுவலரிடம் கேட்டபோது ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் தவணைத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாராம். இதனால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இந்த சம்பவம் கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story