ராமநாதபுரத்தில் பட்டாசு கடைக்கு உரிமம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் கைது


ராமநாதபுரத்தில் பட்டாசு கடைக்கு உரிமம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் - ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2020 3:47 PM GMT (Updated: 5 Nov 2020 3:47 PM GMT)

ராமநாதபுரத்தில் பட்டாசு கடை உரிமம் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள அளவாய்க்கரைவாடி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 57). இவர் கீழக்கரையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வியாபாரம் செய்வதற்காக பட்டாசு கடை உரிமம் வழங்கக்கோரி ஆன் லைனில் விண்ணப்பித்தார். இவருடன் அதே பகுதியை சேர்ந்த லெட்சுமணன் என்பவரும் விண்ணப்பித்து இருந்தாராம். இவர்களின் விண்ணப்பத்துக்கு காவல்துறையின் ஒப்புதல் கிடைத்த நிலையில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் ஒப்புதலுக்காக இருவரும் சென்றனர்.

அப்போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றும் சிங்காரம் (54) என்பவர் தலா ரூ.10 ஆயிரம் கொடுத்தால் ஒப்புதல் பெற்று பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் சிங்காரத்தை போனில் தொடர்பு கொண்டனர். அப்போதும், உடனடியாக பணம் கொடுத்தால்தான் உரிமம் வழங்க முடியும் என்றும், இல்லாவிட்டால் விண்ணப்பம் நிராகரித்து திருப்பி அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து இருவரின் சார்பில் ரூ.15 ஆயிரம் கொடுக்க முடிவானது. இது குறித்து தனசேகரன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை நேற்று காலை தனசேகரன் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வந்து டிரைவர் சிங்காரத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேசுவரி, குமரேசன், ஏட்டு கவுரிசங்கர் உள்ளிட்டோர் டிரைவர் சிங்காரத்தை சுற்றிவளைத்து கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில், உயர் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக லஞ்சப் பணத்தை கேட்டு பெற்றதாக போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனசேகரனிடம் டிரைவர் சிங்காரம் பேசிய செல்போன் உரையாடல் ஆதாரத்தையும், கையும் களவுமாக கைப்பற்றிய பணத்தையும் வைத்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தனசேகரன் கடந்த ஆண்டு இதேபோன்று பட்டாசு உரிமம் வழங்க கோரி விண்ணப்பித்தபோதும் லஞ்சம் கேட்டார்களாம். பணம் தராததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாம்.

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலக டிரைவர் சிக்கிய சம்பவம் அந்த அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story