தெள்ளாரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தெள்ளாரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 Nov 2020 12:11 PM GMT (Updated: 11 Nov 2020 12:11 PM GMT)

தெள்ளாரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வந்தவாசி, 

வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராம மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழிருப்பவர்கள் பட்டியலில் வறுமையில் வாழும் தங்களை இணைக்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக, வறுமைக்கோட்டுக்கு கீழிருப்பவர்கள் பட்டியல் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் வறுமையில் வாழும் தங்களது பெயர்கள் விடுபட்டதாக கூறி வடவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த 60 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பெயர்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, இன்ஸ்பெக்டர் அல்லிராணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி தகுதியுள்ளவர்களின் பெயர்கள் பட்டியலில் இணைக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story