மனைவியை கொன்று உடலை எரித்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு


மனைவியை கொன்று உடலை எரித்த கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தப்பி ஓடியவருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Nov 2020 11:27 PM GMT (Updated: 15 Nov 2020 11:27 PM GMT)

டி.நரசிப்புரா தாலுகாவில், மனைவியை கழுத்தை நெரித்து கொன்று உடல் மீது மண்எண்ணெயை ஊற்றி எரித்துவிட்டு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மைசூரு, 

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா தொட்டமொலகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(வயது 30). இவர் தொட்டமொலகோடு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். இவரது மனைவி சாந்தம்மா(22). திருமணம் முடிந்த பின்னர் கணவன், மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலையிலும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், சாந்தம்மாவை சரமாரியாக அடித்து, உதைத்தார். இதில் நிலைகுலைந்த சாந்தம்மா மயங்கினார். இருப்பினும் கோபம் தீராத ரமேஷ், சாந்தம்மாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து சாந்தம்மாவின் உடல் மீது ஊற்றி தீவைத்து எரித்தார். அதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே சாந்தம்மாவின் வீட்டில் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அப்போது சாந்தம்மாவின் உடல் எரிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி பன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் தீயில் கருகி கிடந்த சாந்தம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வலைவீச்சு

தப்பி ஓடிய ரமேசையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். சாந்தம்மாவை ரமேஷ் கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


Next Story