பாளையங்கோட்டையில் பயங்கரம் இளம்பெண் வெட்டிக்கொலை அண்ணன் வெறிச்செயல்


பாளையங்கோட்டையில் பயங்கரம் இளம்பெண் வெட்டிக்கொலை அண்ணன் வெறிச்செயல்
x
தினத்தந்தி 17 Nov 2020 7:07 PM GMT (Updated: 17 Nov 2020 7:07 PM GMT)

பாளையங்கோட்டையில் இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் நல்லையா என்ற குட்டி (வயது 30), மகள் சரஸ்வதி (25). இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவில் சரஸ்வதி அங்குள்ள ஒரு நல்லியில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குட்டி, சரஸ்வதியை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

இதில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த குட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரஸ்வதியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் ஜான் பிரிட்டோ, பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், சுதர்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சரஸ்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அண்ணனிடம் விசாரணை

இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட குட்டியை பிடித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரஸ்வதி செல்போனில் அடிக்கடி பேசியதால் கொன்றாரா?, சொத்து பிரச்சினையில் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து குட்டியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாளையங்கோட்டையில் இளம்பெண்ணை அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story