மராட்டிய மேம்பாட்டு ஆணைய முடிவை கண்டித்து பெங்களூருவில் வாட்டாள் நாகராஜ் போராட்டம்


மராட்டிய மேம்பாட்டு ஆணைய முடிவை கண்டித்து பெங்களூருவில் வாட்டாள் நாகராஜ் போராட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2020 11:23 PM GMT (Updated: 17 Nov 2020 11:23 PM GMT)

மராட்டிய மேம்பாட்டு ஆணைய முடிவை கண்டித்து பெங்களூருவில் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார். அப்போது அவர்கள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் உருவபொம்மையை எரித்தனர்.

பெங்களூரு, 

கர்நாடக அரசு, மராட்டிய மேம்பாட்டு ஆணையத்தை ரூ.50 கோடி நிதி உதவியுடன் அமைப்பதாக அறிவித்துள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. எக்காரணம் கொண்டும் இந்த முடிவை செயல்படுத்தக்கூடாது என்றும், இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அந்த மராட்டிய மேம்பாட்டு ஆணைய முடிவை வாபஸ் பெற கோரி கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மராட்டிய மேம்பாட்டு ஆணைய முடிவை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பாவின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினார். இதே போல் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் இத்தகைய போராட்டம் நடைபெற்றது.

அனுமதிக்க மாட்டோம்

இந்த போராட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ், “மராட்டிய மேம்பாட்டு ஆணைய முடிவை எடியூரப்பா உடனே வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தீவிரமாக போராட்டம் நடத்துவோம். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது கன்னடர்களின் வாழ்வா சாவா விஷயம். இதில் நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்“ என்றார்.

Next Story