முடிகொண்டான் பகுதியில் வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்


முடிகொண்டான் பகுதியில் வடிகால் இல்லாததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
x
தினத்தந்தி 19 Nov 2020 10:45 AM GMT (Updated: 19 Nov 2020 11:41 AM GMT)

முடிகொண்டான் பகுதியில் வடிகால் இல்லாததால் நெற்பயிர்கள் நீரில்மூழ்கியுள்ளன.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகொண்டான் பகுதியில் 30 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர்கள் பயிரடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் வயல் வெளியில் வடிகால் வசதி இல்லாததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த 30 வருடங்களுக்கு முன்பு வடிகாலாக இருந்த ஓடையை பலர் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி விட்டனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை மீட்க வேண்டும். சாதாரண மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் அடைமழை பெய்தால் பயிர்கள் முழுவதும் மூழ்கி அழுகிவிடும்.

எனவே வடிகால் ஓடைகளிலும், திருமானூரில் இருந்து அரியலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களில் உள்ள வாய்க்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதனை அகலப்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதல் கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் வயல்வெளியில் தேங்கியிருக்கும் நீரை வடிய வைக்க வேண்டும். அப்போதுதான் பயிர்களை காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story