மராட்டிய மேம்பாட்டு கழகத்திற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி


மராட்டிய மேம்பாட்டு கழகத்திற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் மந்திரி எஸ்.டி.சோமசேகர் பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2020 11:26 PM GMT (Updated: 19 Nov 2020 11:26 PM GMT)

மராட்டிய மேம்பாட்டு கழகத்திற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

பெங்களூரு,


மராட்டிய மாநிலத்துடன் இருக்கும் எல்லை, மொழி பிரச்சினை என்பது வேறு. கர்நாடகத்தில் வசிக்கும் மராட்டியர்கள் நமது கன்னடர்களே. அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதல்-மந்திரி எடியூரப்பா, மராட்டிய சமூக மேம்பாட்டு கழகம் அமைப்பதன் மூலம் நிறைவேற்றியுள்ளார். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். ஒரு சாதிக்கு ஒரு வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை. ஆனால் எல்லா ஆட்சியிலும் இத்தகைய வாரியங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படியே தற்போது மராட்டிய மற்றும் லிங்காயத் சமூகங்களுக்கு புதிய வாரியங்களை எடியூரப்பா அறிவித்துள்ளார்.

சவிதா, பிராமணர் சமூகங்களும் தங்கள் சாதி மக்களின் மேம்பாட்டிற்கு வாரியம் அமைத்து நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சரி என்று கருதினால் அந்த சமூகங்களுக்கும் எடியூரப்பா வாரியங்களை அமைப்பார். பல்லாரியை 2 ஆக பிரித்து விஜயநகர் மாவட்டம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருக்கிறது. இதற்கு சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவும் வரவேற்பு தெரிவித்துள்ளார். வனத்துறை மந்திரி ஆனந்த்சிங், நீண்ட காலமாக போராடி வந்துள்ளார். அவரது போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம்

சோமசேகரரெட்டி எம்.எல்.ஏ., புதிய மாவட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவருடன் நாங்கள் பேசி சமாதானம் செய்வோம். முதல்-மந்திரியின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சோமசேகரரெட்டியும் எங்கள் கட்சியை சேர்ந்தவரே. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது மற்றும் மாற்றி அமைப்பது என்பது முதல்-மந்திரியின் அதிகாரம். அதுகுறித்து நான் எதுவும் பேச முடியாது. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க எடியூரப்பா டெல்லி சென்று வந்துள்ளார். இந்த விஷயத்தில் எங்கள் கட்சி மேலிடம் மற்றும் எடியூரப்பாவின் முடிவே இறுதியானது.

இவ்வாறு எஸ்.டி.சோமசேகர் கூறினார்.

Next Story