கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு


கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு எதிரொலி மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 10:09 PM GMT (Updated: 20 Nov 2020 10:09 PM GMT)

கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக மும்பை, தானேயில் பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ந் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

திறக்க முடிவு

இதனால் கடந்த கல்வி ஆண்டில்(2019-20) பரீட்சை எழுத முடியாத அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்தது.

கொரோனா பரவல் புதிய உச்சத்தை எட்டியதால் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிக்கூடங்களை திறக்க முடியாததால், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபநாட்களாக கொரோனா தாக்கம் தணிந்ததால், தீபாவளிக்கு பிறகு, அதாவது வருகிற 23-ந் தேதியில் இருந்து 9, 10, 12 ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டு வந்தன.

தள்ளிவைப்பு

இந்தநிலையில் திடீர் முடிவாக மும்பையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்பட்டு உள்ளது. இதற்கான முடிவை மும்பை மாநகராட்சி எடுத்துள்ளது. இது குறித்து நேற்று மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மும்பையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. பள்ளிகள் திறப்பு அடுத்த மாதம்(டிசம்பர்) 31-ந்தேதி வரை தள்ளிப்போடப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 16-ந் தேதி மும்பையில் 409 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் அது அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த 17-ந் தேதி 541 பேரும், 18-ந் தேதி 871 பேரும், 19-ந் தேதி 924 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். எனவே பள்ளிகளை திறக்க தற்போது உகந்த நேரம் அல்ல. மேலும் பல பள்ளிகள் கொரோனா சிகிச்சை மையங்களாகவும், தனிமை மையங்களாகவும், பரிசோதனை மையங்களாகவும் செயல்படுகின்றன. எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைத்து இருப்பதாக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறியுள்ளார்.

தானே மாவட்டம்

இதேபோல தானே மாவட்டத்திலும் டிசம்பர் 31-ந் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் தெரிவித்து உள்ளார். ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். தானே மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2-வது அலையின் அச்சம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார். 

Next Story