ஆண்டிப்பட்டி அருகே மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி கொடூர கொலை - கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு


ஆண்டிப்பட்டி அருகே மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி கொடூர கொலை - கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
x
தினத்தந்தி 21 Nov 2020 2:50 AM GMT (Updated: 21 Nov 2020 2:50 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் காரில் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூர் உள்ளது. இங்கு மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று கழுத்து அறுக்கப்பட்டும் பின் பகுதியில் கத்தி சொருகிய நிலையிலும் ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பதை கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் இறந்தவர் மதுரை மேலப்பொன்னகரம் பகுதியை சேர்ந்த நாகு என்ற நாகேந்திரன் (வயது 50) என்பது தெரியவந்தது. இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் நாகேந்திரனின் மனைவி இளவரசி மற்றும் அவரது மகன் ஆகியோர் உறவினர் வீட்டில் நடந்த விசேஷத்திற்காக திருச்சிக்கு சென்றுவிட்டனர். இதனால் வீட்டில் நாகேந்திரன் தனியாக இருந்தார். இதை மர்மநபர்கள் நோட்டமிட்டு அவரை வீட்டில் இருந்து காரில் கடத்தி வந்தனர். பின்னர் அவரை மர்மநபர்கள் மறைவான இடத்தில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு திம்மரசநாயக்கனூரில் சாலையோரம் பிணத்தை வீசி சென்று உள்ளனர்.

இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் நாகேந்திரனை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதேவேந்திரன், கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஆண்டிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான்பாட்ஷா ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் மதுரை, உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் நாகேந்திரன் வீடு உள்ள மதுரை மேலப்பொன்னகரம், பெத்தானியாபுரம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாகேந்திரன் கொலையில் சம்பந்தப்பட்ட மர்மநபர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.

மதுரை ரியல் எஸ்டேட் அதிபரை கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு பிணத்தை திம்மரசநாயக்கனூரில் வீசி சென்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பிரேதபரிசோதனைக்கு பின்னர் நாகேந்திரனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story