நாமக்கல்லில் எலக்ட்ரிக்கல் கடை பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது


நாமக்கல்லில் எலக்ட்ரிக்கல் கடை பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Nov 2020 5:06 AM GMT (Updated: 22 Nov 2020 5:06 AM GMT)

நாமக்கல்லில் எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

நாமக்கல், 

நாமக்கல் கே.எம்.சி.தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவர் ஆனந்த் (வயது 43). இவர் கடந்த 11-ந் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஆனந்த் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் சந்தேக நபர் ஒருவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நாமக்கல் பஸ்நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக துணி பையுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது துணி பையில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. அந்த பணம் குறித்து கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.

இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தபோது, அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் இந்திராநகரை சேர்ந்த மலைராஜ் என்பவரின் மகன் செல்வகுமார் (21) என்பதும், கடந்த 11-ந் தேதி இரவு ஆனந்தின் எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து செல்வகுமாரை கைது செய்த நாமக்கல் போலீசார், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story