உடன்குடியில் இரும்பு பட்டறைகளுக்கு தீ வைப்பு வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு


உடன்குடியில் இரும்பு பட்டறைகளுக்கு தீ வைப்பு வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Nov 2020 5:50 PM GMT (Updated: 23 Nov 2020 5:50 PM GMT)

உடன்குடியில் இரும்பு பட்டறைகளுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உடன்குடி, 

உடன்குடி மேல பஜாரில் செல்லையா, கன்னிமுத்து ஆகியோருக்கு சொந்தமான இரும்பு பட்டறைகள் அடுத்தடுத்து உள்ளன. ஓலை குடிசையில் அமைந்த இந்த பட்டறைகளில் மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட இரும்பாலான ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த பட்டறைகளுக்கு மர்மநபர் தீ வைத்து சென்றார். இதனால் பட்டறைகளில் மளமளவென்று தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இரும்பு பட்டறைகளுக்கு மர்மநபர் தீ வைத்தது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து செல்லையா, கன்னிமுத்து ஆகியோர் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், தங்களது பட்டறைகளுக்கு உடன்குடி மரியம்மாள்புரத்தைச் சேர்ந்த அந்தோணி மகன் தாமஸ் (வயது 35) தீ வைத்ததாக தெரிவித்து இருந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாமசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story