கடன் தர மறுத்த எண்ணெய் வியாபாரியை கொன்று உடலை வீசிய நண்பர் உள்பட 2 பேர் கைது


கடன் தர மறுத்த எண்ணெய் வியாபாரியை கொன்று உடலை வீசிய நண்பர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2020 9:59 PM GMT (Updated: 24 Nov 2020 9:59 PM GMT)

கடன் தர மறுத்த எண்ணெய் வியாபாரியை கொன்று உடலை அணைக்கட்டு பகுதியில் வீசிய நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சில்வாசா, 

குஜராத் மாநிலம் உம்பர்காவ் பகுதியை சே்ாந்தவர் நிலேஷ் ராவல்(வயது29). எண்ணெய் மொத்த வியாபாரி. இவர் பால்கர் மாவட்டம் தலசேரியில் உள்ள கடைகளுக்கு எண்ணெய் வினியோகம் செய்து வந்தார். வாரத்தில் ஒருநாள் பணத்தை வசூல் செய்ய தலசேரிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தலசேரி சென்ற நிலேஷ் ராவல் மாலை வரை வீடு திரும்பவில்லை.

இதனால் அவரது தந்தை தலசேரி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

உடல் மீட்பு

கடந்த 8-ந்தேதி தலசேரியில் உள்ள குர்ஜே அணைக்கட்டு பகுதியில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் படி போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அது காணாமல் போன நிலேஷ் ராவல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரது செல்போன் எண் மூலம் விசாரணை நடத்தினர். இதில் நிலேஷ் ராவலிடம் கடைசியாக பேசிய 38 வயது நண்பர் ஒருவர் சிக்கினார்.

2 பேர் கைது

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று நிலேஷ் ராவலிடம் கடனாக பணம் தரும்படி கேட்டு இருந்தார். இதற்கு அவர் மறுத்ததால் நண்பருடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் போட்டு உள்ளார். பின்னர் சம்பவத்தன்று நிலேஷ் ராவல் தலசேரி சென்ற போது பின்தொடர்ந்து சென்ற நண்பர் மற்றும் கூட்டாளி சேர்ந்து அவரை வழிமறித்தனர். மீண்டும் கடனாக பணம் தரும்படி கேட்டனர். இதற்கு மறுத்ததால் 2 பேரும் சேர்ந்து நிலேஷ் ராவலை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்து, உடலை அணைக்கட்டு பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நண்பர் தெரிவி்த்த தகவலின் படி கூட்டாளியையும் கைது செய்தனர். 2 பேரையும் தகானு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story