செந்துறையில் மழையால் மின்கசிவு: பெற்றோரை இழந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி


செந்துறையில் மழையால் மின்கசிவு: பெற்றோரை இழந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி
x
தினத்தந்தி 27 Nov 2020 8:35 AM GMT (Updated: 27 Nov 2020 8:35 AM GMT)

மழையால் மின்கசிவு ஏற்பட்டதில் செந்துறையில் பெற்றோரை இழந்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் பாலாஜி(வயது 18). பெற்றோரை இழந்த இவர் தனது அத்தை தமிழ்ச்செல்வி வீட்டில் வசித்து வந்தார். பாலாஜி செந்துறையில் உள்ள இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் கடையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்தமழை பெய்தது. இந்த நிலையில் சமத்துவபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக மின்பெட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு கம்பிவேலியில் பாய்ந்து கொண்டிருந்தது.

இற்கிடையில் நேற்று காலையில் பாலாஜி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது மழை பெய்து இருந்ததால் சகதிகாடாக காணப்பட்டது. சகதியில் பாலாஜி மிதித்தபோது, எதிர்பாராமல் வழுக் கியது. இதனால் அவர் கீழே விழாமல் இருப்பதற்காக கம்பிவேலியை பிடித்துள்ளார். அதில் இருந்து வந்த மின்சாரம் பாலாஜி மீது பாய்ந்தது.

இதனையடுத்து அலறித்துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சாவு

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story