பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு


பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் 650 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு
x
தினத்தந்தி 29 Nov 2020 12:17 AM GMT (Updated: 29 Nov 2020 12:17 AM GMT)

பெரம்பலூர் அருகே விவசாய நிலங்களில் வைக்கப்பட்டிருந்த 650 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். விவசாயியான இவருக்கு செட்டிகுளம் கிராமத்தில் இருந்து மாவிலிங்கை செல்லும் சாலையில் அம்மா குளம் அருகில் விவசாய நிலம் உள்ளது. அங்கு அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து பாதுகாப்பாக வைத்துள்ளார்.இந்நிலையில் பட்டறையை பிரித்து சுமார் 400 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருட்டுபோன சின்ன வெங்காயத்தின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விவசாயிகள் அச்சம்

இதேபோல் அப்பகுதியின் அருகே உள்ள நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ரவியின், விவசாய நிலத்தில் பட்டறையில் வைக்கப்பட்டிருந்த 250 கிலோ சின்ன வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் தொடர்ந்து சின்ன வெங்காயம் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதனால் சின்ன வெங்காயம் பட்டறை வைத்துள்ள விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

Next Story