கும்பகோணம் அருகே 927 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் காரில் கடத்திய 3 பேர் கைது


கும்பகோணம் அருகே 927 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் காரில் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2020 3:08 AM GMT (Updated: 29 Nov 2020 3:08 AM GMT)

கும்பகோணம் அருகே 927 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 152 கிலோ புகையிலை பொருட்களை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வாகன சோதனையில் ஈடுபடும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், மோகன் மற்றும் போலீசார் தாராசுரம் அம்மாப்பேட்டை ரவுண்டானாவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தஞ்சையில் இருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 8 வெள்ளை நிற சாக்குகளில் 152 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து காரில் இருந்த தஞ்சை வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(வயது 32), தாராசுரம் எலுமிச்சங்காய்பாளையம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ்(35), பிரசாத்(35) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.70 ஆயிரத்தை கைப்பற்றினர்.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜேஷ்குமார் வீட்டில் 36 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 775 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 செல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story