அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு


அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Nov 2020 3:30 AM GMT (Updated: 29 Nov 2020 3:30 AM GMT)

வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து அ.தி.மு.க. அரசு, விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது என்று தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்

ஒரத்தநாடு,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாகை, தஞ்சை மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக தனது சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்து விட்டு சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

அவர் சென்னை செல்லும்போது திட்டமிட்டபடி மீண்டும் 28-ந் தேதி முதல் தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடருவேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன்படி நேற்று அவர் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலின், திருச்சியில் இருந்து கார் மூலம் தஞ்சைக்கு நேற்று மதியம் 2 மணி அளவில் வந்து சேர்ந்தார். தஞ்சை சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தார்.

விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம்

மாலை 4 மணி அளவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் இருந்து புறப்பட்டு ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டிற்கு சென்றார். அங்கு நடந்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும். கரும்புக்கான நிலுவை தொகையினை வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் உள்ளிட்ட பொருட்களுக்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

விவசாயிகளுக்கு துரோகம்

இந்த கூட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

கடந்த 20-ந் தேதி முதல் நான் மக்களை சந்தித்து வருகிறேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியுடன் கூடுகின்றனர். இதனால் நான் மக்களை சந்திக்கக்கூடாது என்பதற்காக போலீசார் என்னை தினந்தோறும் கைது செய்து தடையை ஏற்படுத்துகின்றனர். இந்த தடைகளை தகர்த்தெறிந்து நான் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறேன். மக்களின் கோரிக்கைகள் எங்களது தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

கொரோனா காலத்திலும் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்த சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

தி.மு.க. ஆட்சி செய்த காலங்களில் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவசாயிகளின் நலன் காக்கும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினோம். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்து வெற்றி பெற வைத்தது போன்று வருகிற 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். அமைய உள்ள தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒரத்தநாடு எம்.எல்.ஏ. எம்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி, ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர்கள் செல்வராசு, ரமேஷ்குமார், கார்த்திகேயன், முருகையன், ஒரத்தநாடு ஒன்றியக்குழு தலைவி பார்வதி சிவசங்கர், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராமலிங்கம், திருவோணம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு மேல உளூரில் தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பேட்டி

பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, வேளாண்மை சட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வடஇந்தியாவில் விவசாயிகள் எழுச்சியுடன் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வடஇந்தியாவில் நடைபெறும் போராட்டம் போல தமிழக விவசாயிகளும் போராட களத்திற்கு வர தயாராகி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வும் பங்கேற்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும். ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தி.மு.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றார்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளத்தில் நடந்த விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நான் பார்த்த எழுச்சியை விட தற்போது அதிகமாக எழுச்சி ஏற்பட்டு இருப்பதை மக்களிடத்திலே பார்க்கிறேன். எல்லோரும் உரிமையோடு என்னிடம் வந்து கோரிக்கை அளிக்கின்றனர். இதற்கு காரணம் ஆட்சி மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வந்து விட்டது. ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. தி.மு.க.தான் ஆட்சி அமைக்கப்போகிறது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராகப் போகிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டால் விவசாயிகளுக்கு தேவையான அத்தனையும் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது’ என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலு தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில்குமார், பட்டுக்கோட்டை ஒன்றியக்குழு தலைவர் பழனிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிலைக்கு மாலை அணிவித்தார்

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி மணிமண்டபத்துக்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை-முத்துப்பேட்டை சாலையில் உள்ள கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தை பார்வையிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார்.

Next Story