வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி தாய்-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி தாய்-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Nov 2020 3:34 AM GMT (Updated: 29 Nov 2020 3:34 AM GMT)

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, தச்சு தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்ததாக தாய்-மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

குளச்சல்,

குளச்சல் அருகே அஞ்சாலியை சேர்ந்தவர் பாலையன் மகன் சுதீஸ் (வயது 35), தச்சு தொழிலாளி. இவரிடம், செம்பொன்விளையை சேர்ந்த ஞானதாஸ் மகன் பிரதாப் சிங் (29), அவருடைய தாய் ராணி என்ற சுதாராணி (54) மற்றும் கருங்கல் பாலூரை சேர்ந்த சிங் மனைவி இந்திரா (33) ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2018-ம் ஆண்டு 3 தவணைகளாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் 3 வாரத்தில் விசா ரெடியாகிவிடும் என்று சுதீஸிடம் கூறிய பிரதாப் சிங் கத்தார் சென்று விட்டதாக தெரிகிறது. அவர் கத்தார் சென்று பல மாதங்கள் ஆகியும் சுதீசுக்கு விசா வாங்கி கொடுக்கவில்லை என்றும், பணத்தை திருப்பி கேட்ட போது, அதையும் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு

இதுபற்றி சுதீஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் கத்தாரில் இருக்கும் பிரதாப் சிங்கை பல முறை தொடர்புக்கொண்டு பேசியும் எந்த பலனும் இல்லை. அதைத்தொடர்ந்து சுதீஸ் இரணியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த கோர்ட் பிரதாப் சிங், அவரது தாய் ராணி மற்றும் பாலூர் இந்திரா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய குளச்சல் போலீசுக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story