பாலாற்றில் இருந்து சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் செல்ல கால்வாய்கள் தூர்வாரும் பணி


பாலாற்றில் இருந்து சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் செல்ல கால்வாய்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 30 Nov 2020 3:34 AM GMT (Updated: 30 Nov 2020 3:34 AM GMT)

பாலாற்றில் இருந்து சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் செல்ல கால்வாய்கள் தூர்வாரும் பணி நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆய்வு.

காட்பாடி,

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த 26-ந்தேதி கனமழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறுபோன்று பெருக்கெடுத்து ஓடியது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக ஆறு, ஏரி, குளம், அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பாலாற்றில் வெள்ளம் பாய்ந்தோடியது. ஆனால் சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் செல்லவில்லை.

பாலாற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக்கால்வாய் சீரமைக்காதது மற்றும் உடைந்த கால்வாய் கரைகளை செப்பனிடாதது ஆகிய காரணங்களால் தண்ணீர் செல்லவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பாலாற்றில் வீணாக செல்லும் தண்ணீரை சதுப்பேரி ஏரிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை அறிந்த அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. நந்தகுமார் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினார். சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, சதுப்பேரி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு நடைபெற்றது.

இதனை நந்தகுமார் எம்.எல்.ஏ. கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பாலாற்றில் செல்லும் வெள்ளம் குறையும் முன்பாக ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். எனவே நீர்வரத்துக் கால்வாயை வேகமாக தூர்வாரி தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


Next Story