திருப்பூர் மார்க்கெட்டிற்கு 10 டன் மீன் வந்தது ஒரு கிலோ அயிலை ரூ.250-க்கு விற்பனை


திருப்பூர் மார்க்கெட்டிற்கு 10 டன் மீன் வந்தது ஒரு கிலோ அயிலை ரூ.250-க்கு விற்பனை
x
தினத்தந்தி 30 Nov 2020 4:05 AM GMT (Updated: 30 Nov 2020 4:05 AM GMT)

திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு 10 டன் மீன்களே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஒரு கிலோ அயிலை மீன் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர சந்தைக்கு உள்புறம் மற்றொரு பகுதியில் மீன் சந்தை உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மீன் பிரியர்கள் மீன்களை வாங்கி செல்வார்கள்.

வாரத்தில் மற்றநாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் விடுமுறை தினமான நேற்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. 10 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

அயிலை ரூ.250-க்கு விற்பனை

இது குறித்து மீன் வியாபாரி அக்கீம் கூறியதாவது:-

திருப்பூர் மீன் மார்க்கெட்டிற்கு சென்னை, தூத்துக்குடி, ஆந்திரா, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். வழக்கமாக விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாள் ஒன்றுக்கு 40 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

திருப்பூர் மார்க்கெட்டிற்கு மீன்களின் வரத்து நேற்று குறைவாக இருந்தது. 10 டன் மீன்கள் தான் விற்பனைக்கு வந்தன. இதற்கிடையே நேற்று திருகார்த்திகை தீபநாள் என்பதால், மீன் வாங்க வந்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது. இதனால் சந்தை வெறிச்சோடியது. மீன்கள் அதிகமாக வந்திருந்ததால், விலைகள் குறைய வாய்ப்பிருந்திருக்கும். குறைவாக மீன்கள் வந்தன. இதனையும் குறைவான பொதுமக்கள் வந்து வாங்கி சென்றதால், மீன்களின் விலைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி நேற்று ஒரு கிலோ கட்லா மீன் ரூ.150-க்கும், ரோகு ரூ.150-க்கும், நெய் மீன் ரூ.120-க்கும், மத்தி மீன் ரூ.150-க்கும், அயிலை மீன் ரூ.250-க்கும், டேம் பாறை மீன் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story