பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி தற்கொலை விஷ ஊசி போட்டுக்கொண்டாரா?


பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி தற்கொலை விஷ ஊசி போட்டுக்கொண்டாரா?
x
தினத்தந்தி 1 Dec 2020 12:25 AM GMT (Updated: 1 Dec 2020 12:25 AM GMT)

பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி சீத்தல் ஆம்தே தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

சந்திராப்பூரில் தொழு நோயாளிகளுக்காக மகாரோகி சேவா சமிதி என்ற அறக்கட்டளையை தொடங்கி சமூக சேவையில் ஈடுபட்டு வந்தவர் பாபா ஆம்தே. இவர் பத்மவிபூஷன் விருது பெற்றவர். கடந்த 2008-ம் ஆண்டு இவர் உயிரிழந்தார். தற்போது மகாரோகி சேவா சமிதியை அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

சமீபத்தில் பாபா ஆம்தேவின் பேத்தி சீத்தல் ஆம்தே மற்றும் குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. சீத்தல் ஆம்தே, மகாரோகி சேவா சமிதி நிர்வாகம் குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதையடுத்து பாபா ஆம்தேவின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். அதில் சீத்தல் ஆம்தே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று சந்திராப்பூர் வரோரா, ஆனந்தவன் ஆசிரமத்தில் சீத்தல் ஆம்தே பிணமாக மீட்கப்பட்டார். அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த தகவலை கூற போலீசார் மறுத்துவிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் நாக்பூரில் இருந்து வரோரா சென்று உள்ளனர். சீத்தல் ஆம்தே பிணமாக மீட்கப்பட்ட அறை சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல சமூக சேவகர் பாபா ஆம்தேவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மராட்டியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story