பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; உதவிக்கு வந்தவர் பலி மற்றொருவர் படுகாயம்


பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; உதவிக்கு வந்தவர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 2 Dec 2020 1:45 AM GMT (Updated: 2 Dec 2020 1:45 AM GMT)

பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் உதவி செய்ய வந்தவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நொய்யல்,

சேலத்தில் இருந்து வறுகடலை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தேனி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் சில்வார்பட்டி கதிரவன் குளத்தை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் (வயது 26) என்பவர் ஓட்டினார். சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் பிரிவு சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது இடதுபுற டயர் திடீரென வெடித்தது. இதனால், ஜோதி ராமலிங்கம், லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அனைத்திந்திய ஓட்டுனர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான வேலாயுதம்பாளையம் அருகே உள்ள திருக்காடுதுறையை சேர்ந்த ஜெகநாதன்(51) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். புகளூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் லாரி நின்று கொண்டிருந்த அய்யம்பாளையம் பிரிவு பகுதிக்கு உதவிக்கு வந்தார்.

மற்றொரு லாரி மோதி பலி

அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜெகநாதன் லாரிக்கு அடியில் சிக்கிக் கொண்டார். ஜோதி ராமலிங்கத்திற்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஜெகநாதனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஜோதி ராமலிங்கத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் கிரேன் எந்திரம் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் ஜோதி ராமலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story