புயல் எச்சரிக்கை தெரியாமல் ஆழ்கடலில் மீன்பிடிக்கிறார்கள்: குமரி மீனவர்கள் கரை திரும்ப கப்பல் படை மூலம் நடவடிக்கை


புயல் எச்சரிக்கை தெரியாமல் ஆழ்கடலில் மீன்பிடிக்கிறார்கள்: குமரி மீனவர்கள் கரை திரும்ப கப்பல் படை மூலம் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2020 5:46 AM GMT (Updated: 2 Dec 2020 5:46 AM GMT)

புயல் எச்சரிக்கை தெரியாமல் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் குமரி மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப கப்பல் படை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில்,

குமரியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீனவர்களை பாதுகாப்பாக கரைதிரும்பச் செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

இதில் மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர்கள் மோகன்ராஜ், அஜித் ஸ்டாலின், கடலோர அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் சர்ச்சில், ஜஸ்டின் ஆன்டனி, சேசடிமை, ரோமான்ஸ், டிக்சன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வழக்குப்பதிவா?

கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் பேசும் போது, புயல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுத்த பிறகும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 161 விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை. அதில் 91 படகுகளில் சேட்டிலைட் போன் உள்ளது. கரை திரும்பாத விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

மீனவர்கள் தரப்பில் பேசும்போது, தூத்தூர் மண்டல பகுதிகளைச் சேர்ந்த ஆழ்கடல் விசைப்படகுகளில் 100 படகுகள் தான் கரை திரும்ப வேண்டியுள்ளது. பல படகுகள் குமரி மாவட்டத்தில் கரை பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளன. பல படகுகள் கேரளா, கர்நாடகா, மராட்டியம், குஜராத் மாநில பகுதிகளில் கரை வந்து சேர்ந்துள்ளனர். எச்சரிக்கை அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே கடலுக்குச் சென்றவர்கள்தான் ஆழ்கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு புயல் பற்றிய எச்சரிக்கை இதுவரை கிடைக்கவில்லை. எனவே கடற்படை உதவியுடன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க போதிய தகவல் தொடர்பு சாதன வசதி இல்லை. புயல் எச்சரிக்கை தகவல் கிடைக்காமல் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது சரியானது அல்ல. எச்சரிக்கை தகவலை பெற்ற பிறகும் கரை திரும்பாமல் இருக்கும் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் தவறில்லை. தகவலே கிடைக்காமல் இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.

நடவடிக்கை

கரை திரும்பாத மீனவர்களுக்கு கப்பல் படை மூலமாக தகவல் தெரிவித்து, கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

Next Story