பஸ் நிறுத்தத்தில் மகனை சுமந்து நின்ற தாயும் படுகாயம் மோட்டார் சைக்கிள் மோதி 2 வயது ஆண் குழந்தை பலி - வாலிபர் கைது

திருத்தணி அருகே பஸ் நிறுத்தத்தில் கைக்குழந்தையுடன் காத்து நின்ற பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வயது ஆண் குழந்தை பலியானது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பெரிய கடம்பூர் காலனியை சேர்ந்தவர் சந்தோஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி நிஷாந்தி. இவர்களுக்கு காளீஸ்வரன் என்ற 2 வயது மகன் இருந்தான். நேற்று மாலை நிஷாந்தி திருத்தணி செல்வதற்காக பெரிய கடம்பூர் காலனி பஸ் நிறுத்தத்தில் குழந்தை காளீஸ்வரனை சுமந்து கொண்டு பஸ்சுக்காக நின்று இருந்தார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த அஜித் (வயது 20) என்ற வாலிபர் மிக வேகமாக ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிஷாந்தி மீது மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிஷாந்தியின் இடுப்பில் இருந்த குழந்தை காளீஸ்வரன் தூக்கி வீசப்பட்டான்.
இதில் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் காளீஸ்வரன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். இந்த விபத்தில் காயமடைந்த நிஷாந்தி மற்றும் குழந்தை காளீஸ்வரன் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக விபத்தில் படுகாயமடைந்த குழந்தையை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு காளீஸ்வரனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர் அஜித்தை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story