சென்னையில் 11-ந் தேதி கவர்னர் மாளிகையை தொடர் முற்றுகையிடும் போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


சென்னையில் 11-ந் தேதி கவர்னர் மாளிகையை தொடர் முற்றுகையிடும் போராட்டம் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2020 2:20 AM GMT (Updated: 3 Dec 2020 2:20 AM GMT)

சென்னையில் வருகிற 11-ந்தேதி கவர்னர் மாளிகையை தொடர் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

திருச்சி,

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாலாறு வெங்கடேசன், திருச்சி மண்டல தலைவர் ஹேமநாதன், மாவட்ட செயலாளர் கே.சி.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் 35 விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லி போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் ஒரு வார காலம் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக டெல்லியில் விமானம், ஹெலிகாப்டர் போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இவ்வளவு போராட்டம் நடந்த பின்னரும், மோடி இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்த புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், கனிமவளங்கள் எடுக்கிறோம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் விளைநிலத்தை முற்றிலுமாக கைப்பற்றி விடுவார்கள். நிலத்தடி நீர் ஆதாரம் பறிபோய்விடும், ஒப்பந்த சாகுபடி முறையில் விவசாயிகள் அடிமைப்படுத்தப்படுவார்கள். இதன் காரணமாகத்தான் இந்த சட்டத்தை தமிழக விவசாயிகள் எதிர்க்கிறார்கள்.

மறு பரிசீலனை

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை நாங்கள் தான் வழங்கினோம். ஆனால் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு ஆதரவளித்து இருப்பதன் மூலம் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டது. எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த சட்டத்துக்கு அளித்த ஆதரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் பாரதீய ஜனதா கட்சியுடன் உள்ள கூட்டணியையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக விவசாயிகள் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து இந்த சட்டங் களை ரத்து செய்யும்படி கேட் டுக் கொள்ள வேண்டும்.

தொடர் முற்றுகை போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கவர்னர் மாளிகையை தொடர் முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதுமிருந்து இந்த போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று கவர்னர் மாளிகையை முடக்குவோம். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். புதிய வேளாண் சட்டத்தை ஆதரித்த கட்சிகளை தேர்தல் களத்தில் சந்திப்போம். அவர்களுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story