வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் ஊர்வலம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கொட்டும் மழையில் விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Dec 2020 2:38 AM GMT (Updated: 3 Dec 2020 2:38 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திருவாரூரில் விவசாயிகள் கொட்டும் மழையில் ஊர்வலம் சென்றனர்.

திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது போலீசாரின் அடக்குமுறைகளை கண்டித்தும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சட்டசபையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி விவசாயிகள் போராட்டக்குழுவினர் திருவாரூர் கல்பாலத்தில் நேற்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து கொட்டும் மழையில் நனைந்தபடி ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர்.

கோஷம் எழுப்பினர்

அங்கு நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்டு), கலியபெருமாள் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜி.சேதுராமன் (விவசாயிகள் நலச்சங்கம்) ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் ரெங்கராஜன், தம்புசாமி, ராமமூர்த்தி, விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாவட்ட செயலாளர்கள் மாரியப்பன், பாரதி, நிர்வாகிகள் ஆசாத், அகிலா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story