கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு இந்திய கம்யூனிஸ்டு- விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு இந்திய கம்யூனிஸ்டு- விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2020 3:02 AM GMT (Updated: 3 Dec 2020 3:02 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாகை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்-விவசாயிகள் சங்கத்தினர் கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தமீம் அன்சாரி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். விவசாயத்தை அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்க கூடாது. டெல்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தாக்கி, அடக்குமுறையில் ஈடுபட்ட மத்திய அரசை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

வேதாரண்யம்

இதேபோல் வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு கோஷங்கள் எழுப்பினர்.

விவசாயிகள் கூட்டமைப்பினர்

கீழையூர் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கொட்டும் மழையில் குடைபிடித்தவாறு திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு கலந்துகொண்டு பேசினார். இதல் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

தாணிக்கோட்டகம்

வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் எதிரே கொட்டும் மழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயற் குழுவை சேர்ந்த கோவை.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட குழுவை சேர்ந்த வெற்றியழகன், ஒன்றிய குழுவை சேர்ந்த இளையபெருமாள், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். இதில் கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மேகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமருகல்

திருமருகல் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் பாபுஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செல்வராசு எம்.பி. கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாய சங்க ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Next Story