மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு


மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 4 Dec 2020 12:27 AM GMT (Updated: 4 Dec 2020 12:27 AM GMT)

மதுரை ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அமராவதி ஆற்றில் சாயக்கழிவுகள் உள்பட பல்வேறு தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வெளியானது. இதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு, விசாரணை நடத்தியது.

இதில் கரூர் மாவட்ட சட்ட மைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

இதனையடுத்து நேற்று கரூர் மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மோகன்ராம் தலைமையிலான அதிகாரிகள் பசுபதி லேஅவுட், எம்.ஜி.ஆர்.நகர், எல்.என்.எஸ். உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று அமராவதி ஆற்றுப்பகுதியில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது குறித்து, பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமராவதி ஆற்று பொதுப்பணித்துறை அதிகாரி சரவணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் ஆய்வின் போது உடன் இருந்தனர்.

Next Story