திருச்சி மாவட்டத்தில் விடிய, விடிய அடை மனழ பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


திருச்சி மாவட்டத்தில் விடிய, விடிய அடை மனழ பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2020 1:24 AM GMT (Updated: 4 Dec 2020 1:24 AM GMT)

திருச்சியில் குளிர் காற்றுடன் விடிய, விடிய அடைமழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருச்சி,

‘புரெவி‘ புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சியிலும் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விடாது தூறிக் கொண்டே இருந்தது. விடிந்த பின்னரும் மழை நின்றபாடில்லை. சிறிது நேரம் வேகமாக பெய்வதும் தொடர்ந்து லேசாக தூறுவதுமாக இருந்தது. காலை 11 மணிக்கு மேல் சற்று வேகமாக மழை பெய்தது. இந்த அடைமழை காரணமாக திருச்சி நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

தண்ணீரில் மூழ்கி மாடு பலி

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே பாதாள சாக்கடை இறங்கு குழியிலிருந்து சாக்கடை நீர் வெளியேறி மழைநீருடன் கலந்தது.டி.வி.எஸ்.டோல்கேட், மன்னார்புரம் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

சுப்பிரமணியபுரம் தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. ஆழ்வார்தோப்பு ‘ஓ‘ பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது.

உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் அருகே உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாததால் மழைநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரில் ஒரு பசுமாடு தவறி விழுந்து இறந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நேற்றுமுன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று இரவு வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. அவசர வேலையாக வெளியே வந்தவர்கள் குடைபிடித்தபடி சென்றனர்.

சாலையோரம் கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் அவற்றின் மீது தார்ப்பாய் மற்றும் பாலிதீன் கவர்களால் மூடி தங்களது பொருட்களை பத்திரப்படுத்தினார்கள். மேலும், மழையின் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. திருச்சி நகர பகுதியை விட புறநகர்ப் பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

மணப்பாறை-சமயபுரம்

சமயபுரம், மண்ணச்சநல்லூர், சிறுகனூர், எதுமலை, பெரகம்பி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக கிராமப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், திருச்சி போன்ற நகரப் பகுதிகளுக்கு கூலி வேலைக்குச் செல்பவர்கள், கட்டிட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் மதுரை சாலை ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

துறையூர்-லால்குடி

துறையூரில் நேற்று அதிகாலை 4 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக துறையூரில் உள்ள சின்ன ஏரி நிரம்பி வருகிறது. மேலும், நகரின் பல்வேறு இடங்களில் குட்டைபோல மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழைநீரை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். இதேபோல, லால்குடி, கல்லக்குடி பகுதிகளிலும் அடை மழை பெய்தது.

மூதாட்டியின் வீடு சேதம்

தா.பேட்டை அருகே துலையாநத்தம் புதுகாலனியில் வசித்து வருபவர் ருக்மணி (வயது 80). இவரது ஓட்டு வீட்டின் பக்கவாட்டு சுவர் மழையால் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் கலைவாணன், கிராம நிர்வாக அலுவலர் காசி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு முசிறி தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதையடுத்து தாசில்தார் சந்திரதேவநாதன் மேற்பார்வையில் மூதாட்டி ருக்மணிக்கு இலவச சேலை, அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் வழங்கினர்.

மேலும், மூதாட்டியின் வங்கிக்கணக்கில் ரூ.4,100 செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Next Story