குடியாத்தத்தில் 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியில் நலத்திட்ட உதவி; அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி மடிக்கணினி வழங்கியபோது எடுத்த படம்
x
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி மடிக்கணினி வழங்கியபோது எடுத்த படம்
தினத்தந்தி 4 Dec 2020 5:15 AM GMT (Updated: 4 Dec 2020 5:15 AM GMT)

குடியாத்தத்தில் ரூ.5½ கோடியில் புதிய கட்டிடங்களுக்கு பூமிபூஜை செய்து, 738 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

நலத்திட்ட உதவி
குடியாத்தம் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் குடியிருப்பு ஆகியவை கட்டுவதற்கான பூமி பூஜை, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆவின் தலைவர் வேலழகன், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, அ.தி.மு.க. நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் குடியாத்தம் தாலுகா அலுவலகம், ரூ.2 கோடியே 12 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகம், ரூ.39 லட்சத்தில் உதவி கலெக்டர் குடியிருப்பு ஆகிய கட்டுமானப் பணிகளுக்கு பூமி பூஜை செய்தும், ரூ.4 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் 738 பயனாளிகளுக்கு வங்கி கடன், வீட்டுமனைப்பட்டா, விபத்து நிவாரண நிதி, தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டி, விவசாய உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.

புதிய ஆம்புலன்ஸ்கள்
தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினி, ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனங்கள், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு தலா இரண்டு 108 ஆம்புலன்ஸ்கள் வழங்கி தொடங்கிவைத்தார். முன்னதாக செதுக்கரை ஜீவா நகரில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்தார்.

நிகழ்ச்சிகளில் தாசில்தார் வத்சலா, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் ரமேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் இமகிரிபாபு, வனராஜ், கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர் நன்றி கூறினார்.

கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த வேப்பங்கனேரியில் ரூ.3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, பில்லாந்தி பட்டு கிராமத்தில் 388 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கே.சி.வீரமணி புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.எம்.ஐ.சீனிவாசன், எடகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் டி.கோபி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் சுதாகர் முனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர் நன்றி கூறினார்.

Next Story