வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காளை, டிராக்டருடன் விவசாயிகள் ஊர்வலம்


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காளை, டிராக்டருடன் விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 10 Dec 2020 1:34 AM GMT (Updated: 10 Dec 2020 1:34 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் பாசன சபையின் சார்பாக குழுமணியில் இருந்து காளை மற்றும் டிராக்டருடன் விவசாயிகள் நேற்று ஊர்வலம் நடத்தினர்.

ஜீயபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் பாசன சபையின் சார்பாக குழுமணியில் இருந்து காளை மற்றும் டிராக்டருடன் விவசாயிகள் நேற்று ஊர்வலம் நடத்தினர். இதற்கு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். ஊர்வலம் குழுமணி காந்தி சிலையில் இருந்து தொடங்கி கோப்பு பாலம், தேரோடும் வீதிகள் வழியாக சென்று மீண்டும் குழுமணியை வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், பொதிகை டி.வி.யில் சமஸ்கிருத மொழியில் செய்தி ஒளிபரப்புவதை உடனே நிறுத்த வலியுறுத்தியும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்கை பரப்பு செயலாளர் சீனி.விடுதலைஅரசு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழாதன், தமிழ்தேச மக்கள் முன்னணி வக்கீல் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story