வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2020 3:58 AM GMT (Updated: 11 Dec 2020 3:58 AM GMT)

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசு வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பதரகுடி காமராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், மாநில நிர்வாகி விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் இனிய தமிழன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறியாளர் அணி செயலாளர் ஆக்கூர் செல்வ அரசு, பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் செல்வம், மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கோஷங்கள் எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை அப்புறப்படுத்தி விட்டு புதிய வீடுகளை கட்டித் தரவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தேவா, ஆசைத்தம்பி, ரஞ்சித், பெருவழுதி, ரியாஸ்கான், சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கட்சி நிர்வாகி வைத்தியநாதன் நன்றி கூறினார்.

இதேபோல் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மக்கள் அதிகாரம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் 60 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை

இதேபோல மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் சீசர் தலைமை தாங்கினார். சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய பொறுப்பாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெப்பதுார் ராஜ்குமார், நிர்வாகிகள் செம்பனார்கோவில் கலைவாணன், கொள்ளிடம் ரகு, குத்தாலம் ரெங்கையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூபதி நன்றி கூறினார்.

Next Story