ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2020 5:16 AM GMT (Updated: 11 Dec 2020 5:16 AM GMT)

ஈரோட்டில் கைதான 4 பேரில் 2 பெண்களுக்கு கருமுட்டை மற்றும் குழந்தை விற்பனையில் தொடர்பு உள்ளது என போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஈரோடு,

ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் அகிலா என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட பெண் ஒருவர், ‘தனக்கு விலைக்கு குழந்தை வேண்டும் என்றும், சட்ட ரீதியான பிரச்சினை வராமல் பார்த்து கொள்ளலாம் என்றும்’ கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுபற்றி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடமும், கருங்கல்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அறிவுரைப்படி போனில் பேசிய பெண்ணிடம் செவிலியர் அகிலா போன் செய்து, தன்னிடம் குழந்தை இருப்பதாகவும், ஈரோடு வந்தால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதை நம்பிய அந்த பெண் தன்னுடன் மேலும் 3 பேரை அழைத்துக்கொண்டு ஈரோடு வந்தார்.

கருமுட்டை

அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோவை மாவட்டத்தை சேர்ந்த சங்கரேஸ்வரி (வயது 30), சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோகிலா (32), மோகனப்பிரியா (24), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (32) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் பிடிபட்டவர்கள், ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகரை சேர்ந்த சண்முகப்பிரியா தான் தனக்கு குழந்தை வேண்டும் என்று கூறியதாவும் தெரிவித்தனர். அதனால் போலீசார் சண்முகப்பிரியாவை பிடிப்பதற்காக பவானி விரைந்தனர். அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசார் தனிப்படை அமைத்து சண்முகப்பிரியாவை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘பிடிபட்டு உள்ள மோகனப்பிரியா மற்றும் கோகிலா ஆகியோர் தங்களது கருமுட்டைகளை ஆஸ்பத்திரியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் பச்சிளம் குழந்தைகளை விலைக்கு வாங்கி விற்கும் இடைத்தரகர்களாகவும் செயல்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள சண்முகப்பிரியா பிடிபட்டால் தான் இந்த கும்பலுக்கு வேறு யாருடனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தெரிய வரும்’ என்றனர்.

Next Story