10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 15 Dec 2020 11:55 PM GMT (Updated: 15 Dec 2020 11:55 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர், 

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உரிமைகளை மீட்டெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சாதிக் பாஷா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில பொருளாளர் குமார், செயலாளர்கள் சிவக்குமார், சங்கர், மாவட்ட தலைவர் மதியழகன் ஆகியோர் பேசினர்.

சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாரதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். பணியின்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூ.40 லட்சத்தை அரசு வழங்கிட வேண்டும். தேர்தலுக்கு முன் டாஸ்மாக் விற்பனையாளர்களின் கோரிக்கைகளை முதல்-அமைச்சருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் கொண்டு செல்ல, சங்கத்தின் சார்பில் மாவட்ட பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.

நடவடிக்கைகளை கைவிட வேண்டும்

விசாரணையின்றி டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, அவர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் ஊட்டி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story