அ.தி.மு.க. மட்டுமே எம்.ஜி.ஆர். ஆட்சியை கொடுக்க முடியும்: அமைச்சர் பாண்டியராஜன்


ஆவடி தொகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
x
ஆவடி தொகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 18 Dec 2020 10:47 PM GMT (Updated: 18 Dec 2020 10:47 PM GMT)

அ.தி.மு.க. மட்டுமே எம்.ஜி.ஆர். ஆட்சியை கொடுக்க முடியும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

மினி கிளினிக்
தமிழகத்தில் அம்மா மினி கிளினிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி சேக்காடு, அண்ணாநகர் தண்டுரை, நெமிலிச்சேரி, திருநின்றவூர் நடுக்குத்தகை உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நேற்று நடந்தது.

அமைச்சர் பாண்டியராஜன், அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். பின்னர் டாக்டர்கள், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் அம்பத்தூர் எம்.எல்.ஏ. வி.அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுக்கு பிரசாரம்
தற்போது 6 கட்சிகள் எம்.ஜி.ஆர். ஆட்சியை கொண்டு வருவோம் என கூறிக்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. உள்ளிட்ட ஒரு கட்சிகூட கருணாநிதியின் ஆட்சியை கொண்டு வருவோம் என கூறியது கிடையாது.

எம்.ஜி.ஆரின் பத்தாண்டு ஆட்சியின் தாக்கம் இன்றும் தமிழகத்தில் மிக அதிகமாக இருக்கிறது. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. வால் மட்டுமே அவரது ஆட்சியை கொடுக்க முடியும்.

நடிகர் கமல்ஹாசன் உள்பட எம்.ஜி.ஆர். ஆட்சி வரவேண்டும் எனக்கூறும் அத்தனை கட்சிகளும் அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அது நல்ல விஷயம்தான். அதை நான் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story