சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசாரால் தேடப்பட்ட 15 பேர் நாமக்கல், கரூர் கோர்ட்டுகளில் சரண்


சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசாரால் தேடப்பட்ட 15 பேர் நாமக்கல், கரூர் கோர்ட்டுகளில் சரண்
x
தினத்தந்தி 24 Dec 2020 5:13 AM GMT (Updated: 24 Dec 2020 5:13 AM GMT)

சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 15 பேர் நாமக்கல், கரூர் கோர்ட்டுகளில் சரண் அடைந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 34). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, ரேஷன் அரிசி கடத்தல் என 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியதாக செல்லதுரையை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனிடையே குண்டர் சட்டத்தில் இருந்து செல்லதுரை விடுவிக்கப்பட்டதால் கடந்த 15-ந் தேதி சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எருமாபாளையம் மெயின் ரோட்டில் காரில் செல்லதுரை சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார்களில் வந்த மர்மகும்பல் செல்லதுரையை வழிமறித்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

பரபரப்பு தகவல்கள்

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகளை விரைவில் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ெதாடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றியவர் விஜயகுமார். இவருடைய மகன் சூர்யா, ரவுடி சூரி என்பவருடைய உறவுக்கார பெண்ணை காதலித்து வந்தார்.

இதையடுத்து சூரியின் மகனும், ரவுடியுமான டெனிபா தனது கூட்டாளிகளுடன் விஜயகுமார் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது விஜயகுமார் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 2015-ம் ஆண்டு நடந்தது.

பழிக்குப்பழி

இந்த கொலை தொடர்பாக பிரபல ரவுடி சூரியின் மகன்கள் டெனிபா, சிலம்பரசன் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தனது தந்தையை கொலை செய்தவர்களை பழி தீர்ப்பேன் என்று சூர்யா சபதம் ஏற்றார்.

இதையடுத்து அவர் தனியாக ஒரு கோஷ்டியை உருவாக்கினார். மேலும் சூரியின் மற்றொரு மகனான நெப்போலியனை, நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட செல்லதுரை மற்றும் ஜான் உள்பட சிலர் சேர்ந்து 2015-ம் ஆண்டே கொலை செய்தனர். விஜயகுமார் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது.

இந்த 2 கொலை வழக்குகளிலும் சூரி கோஷ்டியை சேர்ந்தவர்களும், செல்லதுரை கோஷ்டியை சேர்ந்தவர்களும் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றனர். இந்த கொலை வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. செல்லதுரைக்கு நெருங்கிய நண்பராக ஜான் இருந்து வந்தார். இந்த நிலையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களிடையே மோதல் ஏற்பட்டு பிரிந்தனர்.

போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்

இதையடுத்து சூரியின் மகன்கள் அணியில் ஜான் சேர்ந்து கொண்டார். பின்னர் அவர் செல்லதுரை ரேஷன் அரிசி கடத்துவது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் செல்லதுரையை தீர்த்துக்கட்ட ஜான் மற்றும் சூரி கோஷ்டியினர் முடிவு செய்தனர். இருந்தாலும் சமரசமாக செல்லலாம் என கூறி அவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் செல்லதுரையை தீர்த்துக்கட்டி உள்ளனர்

இவ்வாறு போலீசார் கூறினர்.

இந்த கொலை தொடர்பாக ஜான் உள்பட 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் சிலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 பேர் கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ்மணிகண்டன் (32), கி.விக்னேஷ் (35), பாண்டியராஜ் (31), ரஞ்சித்குமார் (32), ஆர்.விக்னேஷ் (35), சாணக்யா (26), மணிகண்டன் (29) ஆகிய 7 பேர் நேற்று கரூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தனிப்படையினர் கரூர் விரைந்தனர்.

மேலும் அவர்களை கோர்ட்டு உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் கோர்ட்டு

இதற்கிடையே நேற்று இந்த கொலை வழக்கில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த காதர் உசேன் (26), பிரபு (29), மணிகண்டன் (23), யுவராஜ் (33), சாரதி (24), பாலமுருகன் (33), சின்னவர் (23), சுரேஷ் (34) என மொத்தம் 8 பேர் நாமக்கல் 2-வது குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கபாலீஸ்வரன் முன்பு சரண் அடைந்தனர்.

அவர்கள் 8 பேரையும் வருகிற 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் 8 பேரும் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 15 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Next Story