பொங்கல் பண்டிகையையொட்டி லாலாபேட்டையில் மண் பானைகள் விற்பனை மும்முரம்


பொங்கல் பண்டிகையையொட்டி லாலாபேட்டையில் மண் பானைகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 25 Dec 2020 1:29 AM GMT (Updated: 25 Dec 2020 1:29 AM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி லாலாபேட்டையில் மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது..

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் மண்பாண்டங்கள் செய்து பிழைக்கும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பருவநிலைக்கு ஏற்ப கார்த்திகை மாதத்தில் அகல் விளக்குகள், விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் சிலைகள், சித்திரை மாதத் திருவிழா சமயங்களில் அக்கினிச்சட்டி, கஞ்சி கலயம், அடுப்பு தயாரித்தல் போன்றவைகளை மண்ணால் செய்து வருகின்றனர்.

தற்போது, வருகிற 14-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறிய பானை ரூ.100, பெரியபானை ரூ.200-க்கும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சிலர் வெளியூர்களில் இருந்து வந்து மொத்தமாக மண்பானைகளை வாங்கி செல்கின்றனர்.

அரசு கடன் உதவி செய்ய வேண்டும்

இதுகுறித்து மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில், கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் காவிரி ஆற்றில் இருந்து மண் எடுத்து உலர்த்த முடியாமல் உள்ளது.

தற்போது ஓரளவுக்கு வெயில் உள்ளதால் பணியை தொடர்ந்து செய்து கொண்டு உள்ளோம். எங்களுக்கு அரசு கடன் உதவி செய்தால் மண்பாண்டம் தயாரிக்கும் எந்திரம் வாங்கி உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றார்.

Next Story