டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா.வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா.வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
தினத்தந்தி 30 Dec 2020 11:04 PM GMT (Updated: 30 Dec 2020 11:04 PM GMT)

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாயிகளுக்கு ஆதரவு
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

 அப்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு எப்பொழுதும் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக தான் செயல்பட்டு வருகிறது. ‘‘கார்ப்பரேட்’’ நிறுவனங்கள் மட்டுமே பயன்பெற வேண்டும் என்பது போன்ற செயல்பாடுகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது. அதனை நாம் முறியடித்தாக வேண்டும்.

தொடர்ந்து போராட தயார்
மத்திய அரசு சாமானிய மக்களுடைய தொழில்களை அழித்து, அதனை ‘‘கார்ப்பரேட்’’ நிறுவனங்கள் கைப்பற்றிக்கொள்ள துணை நிற்கிறது.

நாடாளும் தலைவர்கள், எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ‘‘கார்ப்பரேட்’’ நிறுவனங்களுக்கு துணை போக கூடாது. விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரவை மாநில பொது செயலாளர் சி.எல்.செல்வம், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் ராஜகுமார், தென் சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவர் ஆர்.சுரே‌‌ஷ், விருகம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஐ.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story