கூகுடி ஊராட்சியில் அடர் காடுகள் உருவாக்கும் பணி


கூகுடி ஊராட்சியில் அடர் காடுகள் உருவாக்கும் பணி
x
தினத்தந்தி 31 Dec 2020 5:52 PM GMT (Updated: 31 Dec 2020 5:52 PM GMT)

திருவாடாைன யூனியன் கூகுடி ஊராட்சியில் அடர்காடுகள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது.

தொண்டி,

திருவாடானை யூனியன் கூகுடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நீர்க்குன்றம் மற்றும் அரநூற்றிவயல் காணப்பொட்டல் ஆகிய இடங்களில் தலா 500 மரக்கன்றுகள் வீதம் 2 குறுங்காடுகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் கூகுடி ஊராட்சி அறிவித்த கிராமத்தில் உள்ள மயானம் அருகில் சுமார் 2½ ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர் காடுகள் உருவாக்க திட்டமிடப் பட்டது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா அடர்காடுகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ராஜா, மங்கலக்குடி ஊராட்சி தலைவர் அப்துல்ஹக்கீம், கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா, கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூலம் வேம்பு, புளி, புங்கை, நாவல், மலைவேம்பு, பூசரை, அத்தி, ஆலமரம், அரசமரம், தேக்கு மற்றும் மா, பலா உள்ளிட்ட பழ மரங்கள், மூலிகை மரங்கள் நடப்பட்டு அடர் காடுகள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளபட்டு வருகிறது.

Next Story